2987. துளமதி யுடைமறி தோன்று கையினர்
  இளமதி யணிசடை யெந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைக லோங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே.            1

     1. பொ-ரை: இறைவன், துள்ளிக்குதிக்கும் இயல்புடைய
மான்கன்றை ஏந்தியுள்ள திருக்கரத்தினன். இளம்பிறையை
அணிந்துள்ள சடையன். எம் தந்தையாகிய அச்சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது சிவஞானிகள் வாழ்கின்ற திருவைகல்
என்னும் திருத்தலத்தில், அழகிய சந்திரனை வருடுமளவு ஓங்கி
உயர்ந்துள்ள திருமாடக்கோயில் ஆகும்.

     கு-ரை: து(ள்)ளமதியுடைமறி - துள்ளிக் குதிக்கக் கருத்து
உடையமான் கன்று. உளம் - உள்ளம். வைகல் - தலத்தின் பெயர்.
மாடக்கோயில் ஆலயத்தின் பெயர்.