2995. மாலவன் மலரவன் நேடி மால்கொள
  மாலெரி யாகிய வரதர் வைகிடம்
மாலைகொ டணிமறை வாணர் வைகலில்
மாலன மணியணி மாடக் கோயிலே.          9

     9. பொ-ரை: திருமாலும், பிரமனும் இறைவனின்
அடிமுடிகளைத் தேடியும் காணமுடியாது மயக்கம் கொள்ள,
நெருப்பு மலையாய் நின்ற, வழிபடுபவர்கட்கு வேண்டிய வரங்களை
அளிக்கவல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது,
பூமாலைகளை இறைவனுக்கு அணிவித்து, வேதங்களை ஓதி வழிபாடு
செய்யும் அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும்
திருத்தலத்தில், மேகம் போலும் நிறத்தையுடைய நீலமணிகளால்
அழகுபடுத்தப்பட்ட மாடக்கோயில் ஆகும்.

     கு-ரை: மால் - (அவன்) திருமால். மால்கொள்ள - மயக்கம்
கொள்ள. மால் எரி ஆகிய - நெருப்பு (மலை) ஆகிய. வரதர் -
சிவபெருமானுக்கொரு பெயர். வேண்டிய வரங்களை அளிக்க
வலல்வர், சிவபெருமானொருவனேயாவர்; ஏனையர், அத்தகையர்
அல்லர்.

     மறைவாணர் - மறையால் வாழ்பவர்: அந்தணர். மால்
அ(ன்)ன மணி அணிமாடம் - மேகம்போலும் நிறத்தையுடைய
நீலமணிகளாலும் அழகுபடுத்தப் பெற்ற மாடக்கோயில்.