3007. வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய
  மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ
அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே.     10

     10. பொ-ரை: மழித்த தலையையும், முடி பறித்த தலையையும்
உடைய புத்தர்களும், சமணர்களும் கட்டுரையாகக் கூறியவற்றைப்
பயனுடையவெனக் கொள்ள வேண்டா. கங்கையைச் சடையிலே
தாங்கி, அங்குமிங்கும் சுற்றித் திரிதலை ஒழித்து, அம்பர் மாநகரில்
உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இறைவனைத் தரிசித்து அருள்
பெற வாருங்கள்.

     கு-ரை: வழிதலையவர் - மழித்த தலையை யுடையவர்கள் -
புத்தர். பறிதலையவர்கள் - மழித்தலால், மீளவும் முளைத்திடுமென்று
பிடுங்கி விடப்படுதலால் ‘பறிதலையவர்’ எனப்பட்டனர்; சமணர்
மொழியல் என்றதற்கு மொழியா தொழிதல் பொருளாகக் கொள்க.
ஒருமை பன்மை மயக்கம். அழிதலை பொருபுனல் அம்பர் - அங்கும்
இங்கும் சுற்றித் திரிதலை ஒழிந்து, அம்பர் மாநகரில் உமையும்
தாமுமாக. உளர் - இருப்பர். அவரை வணங்கிப் பயனெய்த வம்மின்
என்பது.