3010. |
வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு |
|
தேனணி பொழிற்றிருப் பூவ ணத்துறை
ஆனநல் லுருமறை அங்கம் ஓதிய
ஞானனை அடிதொழ நன்மை யாகுமே. 2 |
2.
பொ-ரை: வானில் அழகுறத் திகழும் சந்திரனைத்
தொடுமளவு உயர்ந்தோங்கிய, வண்டு நுகரும் தேனையுடைய
மலர்களுள்ள அழகிய சோலையையுடைய திருப்பூவணத்தில்
வீற்றிருந்தருளுகின்ற, நலம் தரும் நான்கு வேதங்களையும்,
அவற்றின் ஆறு அங்கங்களையும் ஓதியருளிய ஞானவடிவினனான
சிவபெருமானின் திருவடிகளைத் தொழ, எல்லா
நலன்களும் உண்டாகும்.
கு-ரை:
வானணி...பூவணம் - வானத்தை அழகுசெய்கின்ற
சந்திரமண்டலம் அளாவிய உச்சியையும், கருவண்டுகளுடன்
தேன்வண்டுகளின் வரிசையையுடைய சோலைசூழ்ந்த திருப்பூவணம்.
ஆன - பொருந்திய. நல் அரு மறை - நல்ல அரிய வேதங்கள்;
இருக்கு, யசுர், சாமம் இவையே சிறந்த வேதம் எனப்படும். இவை
மூன்றுமே சிறந்தன என்பதை, சிறந்தவேதம் விளங்கப்பாடி என்ற
மதுரைக்காஞ்சிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையானும் காண்க.
ஆறு அங்கம் - வேதத்தின் ஆறு அவயவம். அவை; சிக்கை,
கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம்
என்பவை. ஞானன் - சிவனுக்கு ஒரு பெயர். ஞானன்
என்பவர்க்கன்றி நன்கில் லையே என்ற (திருக்குறுந்தொகை)
அப்பமூர்த்திகள் அருளிச் செயலிலும் காண்க
|