3024. |
சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக் |
|
கூடுவர்
உலகிடை ஐயங் கொண்டொலி
பாடுவர் இசைபறை கொட்ட நட்டிருள்
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே. 5 |
5.
பொ-ரை: இறைவர் சடைமுடியில் கங்கையைச் சூடி
உள்ளார். தம் திருமேனியில் ஒரு பாகமாக உமாதேவியை
வைத்துள்ளார். இவ்வுலகில் பிச்சை ஏற்கும் பொழுது இசையோடு
பாடுவார். பறைகொட்ட நள்ளிருளில் நடனம் ஆடுவார். இது
திருக்கருக்குடியில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானின்
அருள் தன்மையாகும்.
கு-ரை:
நங்கை - பெண்களிற் சிறந்தவள். ஒலிபாடுவர் இசை
- இசையை ஒலியோடு பாடுவர். நட்டு நள் + அ + து நள்ளது =
நடுவினது; அகரச் சாரியை நீக்கினால் நள் + து = நட்டு என்று
ஆகும். நட்டு இருள் - நடுவினதாகிய இருளில். நடு இராத்திரியில்
ஆடுவர். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே என்பது
திருவாசகம். அண்ணல் வண்ணம் - இது கருக்குடி அண்ணல்
தன்மையாம். நடு + இருள் - நட்டிருள் என்பதே தக்கது.
|