3029. சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி
  ஆக்கிய வுரைகொளேல் அருந்தி ருந்நமக்
காக்கிய அரனுறை அணிக ருக்குடிப்
பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே.     10

     10. பொ-ரை: புத்தரும், சமணர்களுமான வஞ்சகர் கூறும்
பொய்ம்மொழிகளை உரையாகக் கொள்ள வேண்டா. பெறுதற்கரிய
சைவசமயத்தில் நம்மைப் பிறக்குமாறு செய்த சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற அழகிய திருக்கருக்குடி என்னும்
திருத்தலத்திலுள்ள பூமணம் கமழும் திருக்கோயிலைச் சார்ந்து
உய்தி அடையுங்கள்.

     கு-ரை: சமண்படு - சமணக் கோட்பாடு. பொருந்திய. கையர்
- வஞ்சகர். அருந்திரு - சைவசமயத்திற் பிறத்தல் பிறர் எவருக்குங்
கிடைத்தற்கரிய திரு - செல்வம், பாக்கியம். “நரர்பயில்
தேயந்தன்னில் நான்மறை பயிலா நாட்டில் ... ... பரசமயங்கள்
செல்லாப் பாக்கியம் பண்ணொணாதே.” சிவஞான சித்தியார்.
அத்திருவை நமக்கு ஆக்கிய அரன். புடைபட்டு - சார்ந்து; ஒருமை
பன்மை மயக்கம்.