3041. நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
  கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர் உம்ப ராவரே.           11

    11. பொ-ரை: நன்னெறி கூட்டுவிக்கும் தமிழ் பரப்பும்,
ஞானசம்பந்தன், நான்கு வேதங்களையும் கற்று வல்லவனாய்ச் சீகாழி
மக்கள் தலைவனாய் மனத்தால் தியானித்துப் பாடிய, கேடுகள்
வாராமல் தடுக்கும் திருவைந்தெழுத்தின் பெருமைகளை
எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப் பாடல்களையும்
ஓதவல்லவர்கள் தேவர்களாவார்கள்.

     கு-ரை: உன்னிய - நினைத்துப்பாடிய. அற்றம் இல் மாலை -
கேடு அவமானம் முதலியன இல்லையாக்குவிக்கும் (வாராமல்
தடுக்கும்) மாலை. ஐந்தெழுத்து உற்றன ஆகிய இம்மாலையிலுள்ள
பத்துப் பாசுரங்களில் வல்லவர் தேவர் ஆவர்.