3042. உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
  திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே.      1

     1. பொ-ரை: அழகே உருவான உமாதேவியோடு ஒன்றிநின்ற,
செல்வரான சிவபெருமான் தம் சடைமுடியில் திங்களும், கங்கையும்
சூடியவர். வானவர்கள் அஞ்சித் தொழுது போற்றுமாறு,
வெகுண்டெழுந்து போர்க்கோலம் பூண்டு வில்லேந்தி, அப்பெருமான்
வீற்றிருந்தருளுகிற இடம் திருவிற்கோலம் ஆகும்.

     கு-ரை: உரு - அழகு. உருவின் ஆர் - அழகினால் நிரம்பிய.
உமையொடும் ஒன்றி நின்றது. ஓர் திருவினான் - வேறறக் கலந்து
நின்ற செல்வத்தன். “அவளால்வந்த வாக்கம் இவ் வாழ்க்கை
யெல்லாம்” (சிவஞான சித்தியார். சூ1.69.) திங்கள் கங்கையான் -
திங்களோடு அணிந்த கங்கையையுடையவன்.