3050. சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர்
  நீர்மைஇல் உரைகள்கொள் ளாத நேசர்க்குப்
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையி னான்இடம் திருவிற் கோலமே.        10

     10. பொ-ரை: இறையுண்மையை உணரும் தன்மையில்லாத
சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ளாது, இறை
நம்பிக்கையுடன் அவன்மீது பக்தி செலுத்துபவர்கட்கு உலகில்
பெருஞ்செல்வத்தைப் பரிவுடன் இறைவன் தருவான். அத்தகைய
மேன்மையுடைய பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம்
ஆகும்.

     கு-ரை: சீர்மை - ஒழுங்கு. நான்காமடியிற் சீர்மை - மேன்மை.
“சீர்மை சிறப்பொடு நீங்கும்” (குறள் - 195) என்பதிற்போல, சமணர்
என்ற சொல் சமண் என விகுதி குன்றி வந்தது; தூது, அரசு
அமைச்சு என்றாற் போல். சீவரம் - புத்தமதத் துறவி யுடுத்தும் காவி
ஆடை. கையர் வெறுக்கத் தக்கவர். கைத்தல் - வெறுத்தல்.