3079. பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்
  வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும்என் உள்ளமே.      6

     6. பொ-ரை: பள்ளம் போன்ற படர்ந்த சடையில், வெள்ளம்
போலப் பாய்ந்த கங்கையைத் தாங்கி வெண்ணிறச் சந்திரனையும்
சூடினான் சிவபெருமான். கள்ளம் என்பதை அறியாது வெள்ளை
உள்ளத்துடன் இறைவனை வழிபடுகின்ற, திருக்கானப்பேர் என்னும்
திருத்தலத்திலுள்ள மெய்யடியார்களின் திருவுள்ளத்தைக் கோயிலாக
நினைத்து என் மனம் வழிபடும்.

     கு-ரை: பள்ளம்-பள்ளம்போல். மே-மேவிய-பொருந்திய.
படர்ந்த சடையில். பாய்ந்தநீர் வெள்ளம் தாங்கினான். நீர் பாய்வது
பள்ளத்தில் ஆதலால் கங்கை நீருக்குச் சடை பள்ளம் போல்
இருந்தது என்பது. பள்ளம் மே(வு) படர்சடை. மே +
சடை-வினைத்தொகை. கள்ளம் நினைத்தலையும் செய்தறியாதவர்களாகிய மெய்யன்பர் கருதிய கானப்பேர்.