3100. |
கங்கையார் சடையிடைக் கதிர்மதி யணிந்தவன் |
|
வெங்கண்வாள்
அரவுடை வேதியன் தீதிலாச்
செங்கயற் கண்உமை யாளொடுஞ் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே. 5 |
5.
பொ-ரை: கங்கையைத் தாங்கிய சடைமுடியின் இடையில்
ஒளிரும் சந்திரனை அணிந்தவன் சிவபெருமான். கொடிய
கண்ணையுடைய ஒளியுடைய பாம்பை ஆபரணமாக அணிந்தவன்.
வேதத்தை அருளி வேதப்பொருளாகவும் விளங்குபவன். தன்னை
வழிபடுபவர்களின் தீவினைகளை நீக்கும் அருளுடைய சிவந்த
கண்ணையுடைய உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளும்
இடம் மங்கையர்கள் நடம் பயின்று விளங்கும் சிறப்புடைய
திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
கு-ரை:
வாள் அரவு - ஒளியையுடைய பாம்பு. வாள் என்னும்
சொல் பாம்புக்கு அடைமொழியாக வருவதைப் பல இடங்களிலும்
காண்க. தீது இலா உமையாள் -தன்னையடைந்தவர்களின் பாவத்தை
இல்லையாகச் செய்விப்பவளாகிய உமையாள். இலா என்னும்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்துப் பிறவினை விகுதி தொக்கது.
|