3107. வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
  ஊருமன் னும்பலி உண்பதும் வெண்டலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.        1

     1. பொ-ரை: கச்சணிந்த முலையையுடைய உமாதேவியைத்
தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, சிவபெருமான்
பிரமகபாலம் ஏந்தி ஊர்தோறும் சென்று பிச்சை ஏற்பவர்.
அப்பெருமான் மேகத்தைத் தொடும்படி வளர்ந்துள்ள சோலைகள்
சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் கங்கையைத்
தாங்கிய சடைமுடியை உடைய நிமலராய் விளங்குவது அவர்தம்
சிறந்த குணமாகும்.

     கு-ரை: வார், ஊர், கார், நீர் - ரகரவீற்றுச் சொற்கள் உகரச்
சாரியை பெற்றன. ஊரில் ஏற்கும் பிச்சையை யுண்பதும் வெண்
தலையில். மன் உம் இரண்டும் அசைநிலை.

     இது திருக்காட்டுப்பள்ளி நிமலர்தம் நீர்மையாகும். பங்கினன்
நிமலர்; பால் வழுவமைதி.