| 
         
          | 3131. | கோங்கிள வேங்கையும் கொழுமலர்ப் புன்னையும் |   
          |  | தாங்குதேன் கொன்றையும் தகுமலர்க் குரவமு மாங்கரும் பும்வயன் மயேந்திரப் பள்ளியுள்
 ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.      3
 |  
            3. 
        பொ-ரை: கோங்கு, வேங்கை, செழுமையான மலர்களையுடைய புன்னை, தேன் துளிகளையுடைய கொன்றை,
 சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த
 சோலைகளும், மாமரங்களும், கரும்புகள் நிறைந்த வயல்களும்
 உடைய திருமயேந்திரப்பள்ளியில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின்
 வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளை வணங்குவீர்களாக.
       கு-ரை: 
        சோலைகளில் கோங்கு குரவம் முதலிய மரங்களும்; வயல்-வயல்களில். கரும்பும் பொருந்திய, மயேந்திரப்பள்ளி என்பது
 முன்னடிகளின் பொருளாதலின் அதற்கேற்பச் சோலையில் என்று
 ஒரு சொல் வருவித்து, வயல் மாவும் கரும்பும் எனமாற்றி ஏழனுருபு
 விரிக்க. மா + கரும்பு = மாங்கரும்பு என்ற உம்மைத் தொகையிலும்
 மெலிமிக்கது, எதுகை நோக்கி. மயேந்திரப்பள்ளியுள் ஆங்கு
 என்பதை "எம்மூர் ஆங்கண்" என்பதுபோற் கொள்க.
 |