3131. கோங்கிள வேங்கையும் கொழுமலர்ப் புன்னையும்
  தாங்குதேன் கொன்றையும் தகுமலர்க் குரவமு
மாங்கரும் பும்வயன் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.      3

     3. பொ-ரை: கோங்கு, வேங்கை, செழுமையான
மலர்களையுடைய புன்னை, தேன் துளிகளையுடைய கொன்றை,
சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த
சோலைகளும், மாமரங்களும், கரும்புகள் நிறைந்த வயல்களும்
உடைய திருமயேந்திரப்பள்ளியில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின்
வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளை வணங்குவீர்களாக.

     கு-ரை: சோலைகளில் கோங்கு குரவம் முதலிய மரங்களும்;
வயல்-வயல்களில். கரும்பும் பொருந்திய, மயேந்திரப்பள்ளி என்பது
முன்னடிகளின் பொருளாதலின் அதற்கேற்பச் சோலையில் என்று
ஒரு சொல் வருவித்து, வயல் மாவும் கரும்பும் எனமாற்றி ஏழனுருபு
விரிக்க. மா + கரும்பு = மாங்கரும்பு என்ற உம்மைத் தொகையிலும்
மெலிமிக்கது, எதுகை நோக்கி. மயேந்திரப்பள்ளியுள் ஆங்கு
என்பதை "எம்மூர் ஆங்கண்" என்பதுபோற் கொள்க.