3135. சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
  நடநவில் புரிவின னறவணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை யுடையவ னடிபணிந் துய்ம்மினே.    7

     7. பொ-ரை: சடைமுடியுடைய முனிவர்கள்
பூசைத்திரவியங்களைச் சேகரித்து வழிபட, திருமயேந்திரப்பள்ளியுள்
வீற்றிருந்தருளுபவனும், திருநடனம் செய்பவனும், தேன் துளிக்கும்
வாசனைமிக்க அழகிய மலர்களோடு பரந்து விரிந்த சடையில்
சந்திரனைச் சூடியவனும், வலிமையுடைய எருதினை வாகனமாக
உடையவனுமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை
அடைவீர்களாக!

     கு-ரை: சமைவு ஓடும் - சேகரித்த
பூசைத்திரவியங்களோடும்(வழிபட). சமைவு - சேகரித்தல்,
அமைத்தல். இங்கு ஆகுபெயர்.