3144. வரியணி நயனிநன் மலைமகண் மறுகிடக்
  கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்
பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய
எரியவ னுறைவிட மேடகக் கோயிலே.         5

     5. பொ-ரை: செவ்வரி படர்ந்த கண்களையுடைய, நல்ல
மலை மகளான உமாதேவி கலங்க, யானையின் தோலை உரித்த,
விடம் அணிகண்டரான, பெருமை மிகுந்தவரான சிவபெருமான்,
பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் விளங்கும் சோதி
உருவினார். அவர் வீற்றிருந்தருளும் இடமாவது திருவேடகக்
கோயிலாகும்.

     கு-ரை: செவ்வரி பரவிய கண்களையுடையவளாகிய, மலை
மகள் கலங்கக் கரியினை உரிசெய்த மிடற்றினான் என்பது
முதலிரண்டடியின் பொருள். கறை - விடக்கறை. எரியவன்
- நெருப்பு உருவினன்.