3146. தடவரை யெடுத்தவன் றருக்கிறத் தோளடர்
  படவிர லூன்றியே பரிந்தவற் கருள்செய்தான்
மடவர லெருக்கொடு வன்னியு மத்தமும்
இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே.     8

     8. பொ-ரை: பெரிய கயிலைமலையை எடுத்த இராவணனின்
செருக்கைக் கெடுத்துத் தோள்கள் நொருங்கும்படி காற்பெருவிரலை
ஊன்றிப், பின்னர் தவறுணர்ந்து இராவணன் இசைத்து வழிபட
அவனுக்குப் பரிவுடன் அருள்செய்த இறைவனாய், இளைய எருக்கு,
வன்னி, ஊமத்தம் மலர்களை அணிந்த சடைமுடியுடைய
சிவபெருமான் திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் இறைவன்
ஆவான்.

     கு-ரை: தருக்கு - கர்வம். இற - கெட. தோள் அடர்ப்பட
- தோள்கள் அடர்க்கப்பட. பரிந்து - இரங்கி. மடவரல் - இளமை
பொருந்திய.