3163. கடியவா யினகுரற் களிற்றினைப் பிளிறவோர்
  இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறி
வடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடம்
செடியதார் புறவணி திருமுது குன்றமே.         5

     5. பொ-ரை: கனத்த குரலில் ஆண் யானையானது பிளிற,
இடிபோன்ற குரலில் கர்ச்சிக்கும் சிங்கம் செல்லும் வழிகளில், கூரிய
முனையுடைய மழுப்படை ஏந்தி, உமாதேவியோடு இறைவன்
வீற்றிருந்தருளும் இடமாவது செடிகொடிகள் அடர்ந்த குறிஞ்சிப்
புறவிடமான அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.

     கு-ரை: பிளிற - (யானை) முழங்க, கடிய ஆயின குரல்
களிற்றினை - கடுமை உடையன ஆன குரலையுடைய அவ்
யானையை. ஓர் - ஒரு. ஆளி - சிங்கம். இடிய - இடிபோன்ற.
வெங் குரலினோடு - கொடிய குரலோசையோடு. சென்றிடும் -
செல்லும். நெறி - வழிகளையுடைய - (திருமுதுகுன்றம்) புறவணி
முதுகுன்றம் என்க. வடிய - கூரிய.