3172. கருவினா லன்றியே கருவெலா மாயவன்
  உருவினா லன்றியே யுருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும் பாடலோ டலும்
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.    3

     3. பொ-ரை: இறைவன் கருவயப்பட்டுப் பிறவாமலே எல்லாப்
பொருள்கட்கும் கருப்பொருளாக விளங்குபவன். தனக்கென ஒரு
குறிப்பிட்ட உருவமி்ல்லாத இறைவன் பிற பொருள்களெலாம் உருவு
கொள்ளும்படி தோற்றுவித்து அருள்பவன். அப்பெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது பருவகாலங்களிலும்,
திருவிழாக்காலங்களிலும் பாடலும், ஆடலும் செல்வத்தால் மிகச்
சிறப்புற நடக்கும் புகழையுடைய திருத்தென்குடித்திட்டை
என்பதாகும். கருவினாலன்றி என்றது சிவபெருமான் கருவயப்பட்டுப்
பிறவான் என்பதை உணர்த்தும்.

     “பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை” (தி.6.ப.11 பா.1)
என்ற திருநாவுக்கரசர் திருவாக்கை இங்கு நினைவுகூர்க.
பிறப்பில்லாத அவனுக்கு இறப்புமில்லை. அவன் அநாதி
நித்தப்பொருள். (அநாதி - தோற்றமும், அழிவுமில்லாதது)
உருவினாலன்றி - தனக்கென ஒரு குறிப்பிட்ட உருவம்
இல்லாதவன். தன்பொருட்டு உருவு கொள்ளாது அடியார்
பொருட்டு உருவம் கொள்பவன். “நானாவித உருவால் நமை
ஆள்வான்” (தி.1 ப.9 பா.5) என்ற திருஞானசம்பந்தர்
திருவாக்கையும்,

“இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”

என்ற திருநாவுக்கரசர் திருவாக்கையும் (தி.6 ப.97 பா.10) இங்கு
நினைவுகூர்க.

     கு-ரை: பருவநாள்களிலும், திருவிழாக்களிலும் பாடல், ஆடல்
முதலியவை செல்வத்தினால் மிகச்சிறப்புற நடக்கும் புகழையுடைய
தென் குடித்திட்டை என்பது பின்னிரண்டடிக்கும் பொருள். பருவ
நாளொடும் விழாவொடும், என ஒடு, உம் இரண்டையும் முன்னும்
கூட்டுக. மூன்றன் உருபு ஏழன் பொருளில் வந்த வேற்றுமை
மயக்கம். பருவம் - அமாவாசை, பௌர்ணமி என்பவை.