3179. குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்
  பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்
வண்டிரைக் கும்பொழிற் றண்டலைக் கொண்டலார்
தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.   10

     10. பொ-ரை: கமண்டலம் ஏந்திய கையுடைய சமணர்களும்,
புத்தர்களும் சொல்லும் பொருத்தமில்லாத உரைகளைப் பற்றி
நில்லாதீர். வண்டுகள் ஒலிக்கும் சோலையின் உச்சியில் குளிர்ந்த
மேகங்கள் தவழ, தெளிந்த அலைகளையுடைய குளிர்ச்சியான
ஆறுபாயும் திருத்தென்குடித்திட்டைச் சார்ந்து இறைவனை
வழிபடுங்கள்.

     கு-ரை: பற்றுவிட்டீர்தொழும் - பற்றுவிட்டீர்களாகித்
தொழுமின்கள். விட்டீர் - முற்றெச்சம். தொழும் - ஏவற்பன்மை.

     பொழில் தண்தலை கொண்டல் ஆர் - சோலைகளின்
குளிர்ந்த உச்சியில் மேகங்கள் படியும்.