3193. |
அடையலார்புரம் சீறியந்தண |
|
ரேத்தமாமட மாதொடும்
பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர
மாபுரத்துறைகோயிலான்
றொடையலார்நறுங் கொன்றையான்றொழி
லேபரவிநின் றேத்தினால்
இடையிலார்சிவ லோகமெய்துதற்
கீதுகாரணங் காண்மினே. 4 |
4.
பொ-ரை: பகையசுரர்களின் மூன்று புரங்களையும்
கோபித்து அழித்து, அந்தணர்கள் போற்றி வணங்க, உமா
தேவியோடு, பெண் பறவைகள் தங்கள் ஆண் பறவைகளுடன்
கூடும் கடற்கரைச் சோலைகளையுடைய திருப்பிரமாபுரத்தில் கோயில்
கொண்டருளியவன் சிவபெருமான். இடையீடில்லாதவர்களாய்ச்
சிவலோகம் சென்று அடைவதற்கு, நறுங்கொன்றை மலர்களை
மாலையாக அணிந்த சிவபெருமானின் வழிபாட்டிற்குரியவைகளைச்
செய்து, அவன் அருட்செயல்களைப் போற்றி வழிபடும் நெறியே
சாதனமாகும் என்பதை அறிவீர்களாக.
கு-ரை:
அடையலார் - பகைவர். தொடையல் - மாலை.
கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால் சிவலோகம்
எய்துதற்கு இடைஇல்லார். காரணம் ஈது காண்மின் என்க. இடை
- காலம்.
|