3205. இயலுமாறெனக் கியம்புமின்னிறை
       வன்னுமாய்நிறை செய்கையைக்
கயனெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி
     கண்டியூருரை வீரட்டன்
புயல்பொழிந்திழி வானுளோர்களுக்
     காகஅன்றயன் பொய்ச்சிரம்
அயனகவ்வ தரிந்துமற்றதில்
     ஊணுகந்த வருத்தியே.                 6

     6. பொ-ரை: மெய்யடியார்களே! இறைவன் உலகினுக்கும்,
உயிருக்கும் தலைவனாய் இருப்பதோடு, உலகப்பொருள்களிலும்,

அனைத்து உயிர்களிடத்தும் அவையேயாய்க் கலந்து வியாபித்து
நிற்கும் தன்மையை எனக்கு இயன்ற அளவு இயம்புவீர்களாக!
கயல் போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர் வாழ்கின்ற
திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் உலகத்தில்
மழை பொழியச் செய்து நலம்புரியும் தேவர்கட்காகப் பிரமனுடைய
ஐந்தாவது சிரத்தை அயலார் பரிகசிக்கும்படி நகத்தால் அரிந்து,
அதில் பிச்சையேற்றுண்ணும் விருப்பம் என்கொல்?

     கு-ரை: இறைவனுமாய் நிறை செய்கையை - உலகினுக்கும்
உயிருக்கும் தலைவனுமாய், அவையெயாகி அவற்றுள் வியாபித்து
நிறைந்து நின்ற செய்கையை. புயல் - மேகம். பொழிந்து - மழை
போல் பெய்து. பொய் இன்மைப் பொருளில் வந்தது. அயல் -
அயலார். நக - அவனைப் பரிகசிக்கும்படியாக அது அரிந்து
எனவும், அயலார், தன்னை நக அதில் (அம்மண்டை யோட்டில்)
உணவை உகந்து (உண்டு) எனவும் - இருவழியும் கூட்டுக.
வானவர்களுக்காக அயன்தலையைக் கொய்ததென்பது -
படைத்தற்கர்த்தா தன் தலையைப் படைத்தளிக்கும் வலியின்மையும்
படைப்போற் படைக்கும் பழையோன் இவனே என்பதும் வானவர்
தெளிவதற்காக ஒருவன் தலையைக் கொய்து, அதில் உணவு
நுகர்தல் கடவுட்டன்மைக்கு ஒக்குமா?