3206. திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச்
       செல்வன்றன்னது திறமெலாம்
கருந்தடங்கண்ணி னார்கடாந்தொழு
     கண்டியூருறை வீரட்டன்
இருந்துநால்வரொ டானிழல்லற
     முரைத்தும்மிகு வெம்மையார்
வருந்தவன்சிலை யாலம்மாமதின்
     மூன்றுமாட்டிய வண்ணமே.              7

     7. பொ-ரை: தெளிந்த சிவஞானம் பெற்று இறைவனுக்குத்
தொண்டு செய்யும் அன்பர்களே! மெய்ச் செல்வனாக விளங்கும்
சிவபெருமானின் தன்மைகளை எனக்கு உரைப்பீர்களாக! கருநிற
அழகிய கண்களையுடைய மகளிர் வழிபடும் திருக்கண்டியூர்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன், அன்று
ஆலமரநிழலில் நால்வர்க்கு அறம் உரைத்ததும், தேவர்களைத்
துன்புறுத்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரியுமாறு
மேருமலையை வில்லாக வளைத்ததும் என்கொல்?

     கு-ரை: திருந்துமாறு சொல்லவல்லீர் நீவிரே என்பான்,
திருந்து தொண்டர்கள் என்றான். இன்றேல் "குருடும் குருடும்
குருட்டாட்டமாடிக் குழி வீழ்ந்தவாறே". தொண்டர்கள் அண்மை
விளி. இருந்து நால்வரோடு... வண்ணமே - துறவியாய் உபதேசம்
செய்த தூயோன், திரிபுரத்தசுரர்களைக் கொலை செய்யலாமா?
சரியை கிரியை இரண்டும் - அறம், சிவதன்மம். (திருக்களிற்றுப்படியார்) மாட்டிய - மாள்வித்த. மாள் என்பதன்
பிறவினை.