3150. |
நீரிடைத் துயின்றவன் றம்பிநீள் சாம்புவான் |
|
போருடைச்
சுக்கிரீ வன்அநு மான்றொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே. 1 |
1.
பொ-ரை: பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின்
அவதாரமான இராமனும், இலக்குமணனும், சாம்பவான், சுக்கிரீவன்,
அனுமன் ஆகியோரும் தொழுது வணங்கக் கருநிற நஞ்சை உண்டு
காத்தருள் செய்த எம் பெருமைக்குரிய, எங்களை ஏவல்கொள்ளும்
தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்
திருவுசாத்தானம் ஆகும்.
கு-ரை:
நீரிடைத்துயின்றவன் - இராமன். பாற்கடலில் துயிலும்
திருமாலிடம் வானவர், அரக்கர் தந்த துயரை முறையிட,
இராமனாகப் பிறந்தமை குறித்து 'இராமனை நீரிடைத் துயின்றவன்'
என்றார். நீர்; கடலை ஆகு பெயராற் குறிக்கப் பொதுப்பெயர்
சிறப்புப் பெயராய்ப் பாற்கடலைக் குறித்தது. அனுமன் தொழச்
சேடர்வாழ் திருவுசாத்தானம் என்க. சேடர் வாழ் - வாழ்த்தல்;
வாழ்த்துவது என்னும் பொருளாதலின் வாழ் முதனிலைத்
தொழிற்பெயர்.
|