3245. மாகத்திங்கள் வாண்முக
       மாதர்பாட வார்சடைப்
பாகத்திங்கள் சூடியோ
     ராடன்மேய பண்டங்கன்
மேகத்தாடு சோலைசூழ்
     மிடைசிற்றேம மேவினான்
ஆகத்தேர்கொ ளாமையைப்
     பூண்டவண்ண லல்லனே.            2

     2. பொ-ரை: ஆகாயத்தில் விளங்கும் சந்திரன் போன்று
ஒளியுடைய முகத்தையுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட
சடையில் பிறைச்சந்திரனைச் சூடிப் பண்டரங்கம் என்னும் கூத்தாடும்
இறைவர், மேகம் திகழும் சோலைசூழ்ந்த திருச்சிறே்றமத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் திருமார்பில் ஆமை
ஓட்டினை ஆபரணமாகப் பூண்ட அண்ணலான சிவபெருமான்
அல்லரோ?

     கு-ரை: மாகம் - ஆகாயம். பாகம் - ஒரு பகுதி. (ஒரு கலைத்
திங்கள்) பண்டங்கன் - பாண்டரங்கம் என்னும் ஒரு கூத்தை
விரும்பி ஆடியவன். மிடை - (வளம்) மிகுந்த. ஆகத்து - மார்பில்.
ஏர் - அழகு. இடை ஒன்பது பாட்டிலும் முடிவு ஒன்றாயிற்று.