3250. கிளருந்திங்கள் வாண்முக
       மாதர்பாடக் கேடிலா
வளருந்திங்கள் சூடியோ
     ராடன்மேய மாதவன்
தளிருங்கொம்பு மதுவுமார்
     தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
ஒளிரும்வெண்ணூன் மார்பனென்
     உள்ளத்துள்ளான் அல்லனே.         7

     7. பொ-ரை: கிளர்ந்து எழுந்த பூரண சந்திரனைப் போன்று
ஒளிபொருந்திய முகம் கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட,
குறைவிலாது வளரும் தன்மையுடைய பிறைச்சந்திரனைச் சூடித்
திருநடனம் செய்யும் இறைவர், தளிரும், கொம்புகளும், தேன்
துளிக்கும் மலர்மாலைகளும் சூழ விளங்கும் திருச்சிற்றேமத்தில்
வீற்றிருந்தருளுபவர். அப்பெருமான் ஒளிரும் முப்புரிநூலை அணிந்த
திருமார்பினராய் என் உள்ளத்திலுள்ளவர் அல்லரோ?

     கு-ரை: வளரும் திங்கள் - தன்மை மாத்திரை கூறியது.
வளராத திங்கள் ஆதலால் இளம் திங்கள் என்றபடி.