3251. சூழ்ந்ததிங்கள் வாண்முக
       மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள் சூடியோ
     ராடன்மேய புண்ணியன்
தாழ்ந்தவயற்சிற் றேமத்தான்
     றடவரையைத்தன் றாளினால்
ஆழ்ந்தவரக்க னொல்கவன்
     றடர்த்தவண்ண லல்லனே.           8

     8. பொ-ரை: சந்திரனைப் போன்று ஒளியுடைய முகம்
கொண்ட உமாதேவியார் பண் இசைத்துப்பாட, சடைமுடியில்
பிறைச் சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் புண்ணிய
மூர்த்தியாகிய சிவபெருமான், வயல்வளமிக்க திருச்சிற்றேமத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தம்காற் பெருவிரலை
ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அரக்கனான இராவணன்
நெருக்குண்ணும்படி அன்று அடர்த்த அண்ணல் அல்லரோ?

     கு-ரை: போழ்ந்த - போழ்ந்தாலனைய. "குணந்தான்
வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாயிக் கொடியிடை" என்பதுபோல.
தாழ்ந்த பள்ளமான வயல், தாள் முயற்சியினால், "வாளுழந்ததன்
தாள் வாழ்த்தி" என்பது மதுரைக் காஞ்சி. "தாளுளாள்
தாமரையினாள்" என்பது திருக்குறள்.