3254. |
கல்லிலோத மல்குதண் |
|
கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ்
நவிலுஞான சம்பந்தன்
செல்வனூர்சிற்
றேமத்தைப்
பாடல்சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவா
ரல்லலின்றி வாழ்வரே. 11 |
11.
பொ-ரை: கற்களால் ஆகிய மதிலில் கடல் அலைகள்
மல்கும், குளிர்ந்த கடற்கரைச் சோலைசூழ்ந்த சீகாழியில் அவதரித்த
ஞான சம்பந்தன், செல்வனாகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றதிருச்சிற்றேமத்தைப் போற்றி நல்ல இன்தமிழில்
அருளிய சிறப்புடைய இப்பாடல்களை நாவினால் ஓதவல்லவர்கள்
துன்பம் அற்று வாழ்வார்கள்.
கு-ரை:
கல்லில் - கற்சுவரால் ஆகிய மதிலில். ஓதம் - கடல்
அலைகள் மல்கும். தண்கானல் சூழ்ந்த - குளிர்ந்த கடற்கரைச்
சோலை சூழ்ந்த, காழியான். சீர்காழி வரையின் கீழ்ப்பால் நெய்தல்
நிலமும் ஏனைய மருத நிலமும் உள்ளமையின் சில பாசுரங்களில்
நெய்தல் நிலமாகவும், சிலவற்றில் மருதநிலமாகவும், சிலவற்றில்
இவ்விரு நிலமாகவும் ஆளுடையபிள்ளையார் அருளிச்செய்தனர்.
அவற்றில் திருக்கடைக்காப்பு நெய்தல் நிலவருணனை. கல் -
கற்சுவருக்கு ஆகி அது மதிலைக் குறித்தலால் இரு மடியாகு பெயர்.
"கல்நடந்த மதிற் பிரமபுரத்துறையும் காவலனை" என்ற
திருப்பாடலிலும் இக்கருத்துக் காண்க. கல் நடந்த என்ற சொல்லில்
பிற வினை விகுதி குன்றியதாகி, எடுத்த என்று பொருள்
கொள்ளுதல் முறை. குறிப்புரை (தி.2.ப.40.பா.11) நோக்குக.
|