3273. இலங்கை மன்னனை யீரைந் திரட்டிதோள்
  துலங்க வூன்றிய தூமழு வாளினார்
கலங்கள் வந்துல வுங்கழிப் பாலையை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.     8

     8. பொ-ரை: இலங்கை மன்னனான இராவணனின் இருபது
தோள்களும் நொறுங்கும்படி கயிலைமலையில் தன்காற்பெருவிரலை
ஊன்றிய, தூய்மையான மழுவாகிய படைக்கலத்தை உடைய
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற, மரக்கலங்கள் வந்து உலவும்
திருக்கழிப்பாலையை வலமாக வருபவர்களுக்கு வினைகள் யாவும்
அழிந்துவிடும்.

     கு-ரை: துலங்க - துளங்க (நடுங்க) போலி. ல, ள, ஒற்றுமை.
கலங்கள் வந்துலவும் கழிப்பாலை என்றதனால் அது ஒரு
துறைமுகப்பட்டினமாய் இருக்கவேண்டும்.