3285. நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
  படிய வன்பனி மாமதிச் சென்னியான்
செடிக ணீக்கிய தென்றிரு வாரூரெம்
அடிக டானெனை யஞ்சலெ னுங்கொலோ.         9

     9. பொ-ரை: நீண்டு உயர்ந்த திருமாலும், பிரமனும்
காணமுடியாத தன்மையராய்க்குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில்
தாங்கிய இறைவர், மன்னுயிர்களின் பாவங்களை நீக்கி அழகிய
திருவாரூரில் வீற்றிருந்தருளும் அடிகளாவார். அவர் என்னை
அஞ்சாதே என்று அருள் புரிவாரோ!

     கு-ரை: நேர்கிலா - சிந்திக்க மாட்டாத. கில் - ஆற்றல்
உணர்த்தும் இடைச்சொல். படியவன் - தன்மையன், வடிவினன்
எனலும் ஆம். செடிகள் - தீமைகள், பாவங்கள்.