3309. அங்கை யாரழ லன்னழ கார்சடைக்
  கங்கை யான்கட வுள்ளிட மேவிய
மங்கை யானுறை யும்மழ பாடியைத்
தங்கை யாற்றொழ வார்தக வாளரே.         1

     1. பொ-ரை: இறைவன் அழகிய கையில் நெருப்பேந்தியவன்.
அழகிய செஞ்சடையில் கங்கையைத் தாங்கி, இடம், பொருள்,
காலம் இவற்றைக் கடந்து என்றும் நிலைத்துள்ள அச்சிவபெருமான்
தன் திருமேனியின் இடப்பாகமாக உமாதேவியைக் கொண்டு
வீற்றிருந்தருளும் மழபாடியைக் கைகளால் கூப்பித் தொழும்
அன்பர்கள் நற்பண்பாளர்கள் ஆவர்.

     கு-ரை: சடைக் கங்கையான் - சடையில் தாங்கிய கங்கையை
உடையவன். கடவுள் - எவற்றையும் கடந்தவன்;
சிவபெருமானுக்கொரு பெயர். ‘கடவுளே போற்றி’ என்பது திருவாசம்.
(தி.8.திருச்சதகம் - 64). கடவுள் - கடத்தல். உள் தொழிற்பெயர்
விகுதி. ‘விக்குள்’ என்பதுபோல தொழிலாகு பெயராய்ச்
சிவபெருமானை உணர்த்திற்று. “அண்டம் ஆரிரு ளூடு கடந்து
உம்பர் உண்டு போலும்ஓர் ஒண்சுடர் அச்சுடர், கண்டிங்கு
ஆர்அறி வர்அறிவார் எலாம், வெண்டிங்கட்கண்ணி வேதிய
னென்பரே” (தி.5ப.97 பா.2) என்னுந் திருக்குறுந் தொகையாலறிக.
இடம் மேவிய மங்கையான் - இடப்பாகத்தில் பொருந்திய பெண்ணை
உடையவன். கங்கையைச் சடையில் தாங்கியவன்.
மங்கையை இடம் மேவியவன் என்பவற்றைமுறையே, ‘சடைக்
கங்கையான்’ ‘இடம் மேவிய மங்கையான்’ என்றது வடமொழி விதி.