3322. நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
  தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.             3

     3. பொ-ரை: உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவ
பெருமானைச் சிந்தித்து, தமது அழகிய கையில் உருத்திராக்க
மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச்
செபிப்பவர்களைத் தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச்
செய்வது ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய
‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.

     கு-ரை: உள் நெக்கு - உள்ளம் நெகிழ்ந்து. ஆர்வம் -
ஆசை. அங்கையில் - அழகிய கையிலே. அக்குமாலை கொடு -
உருத்திராக்கச் செபமாலை கொண்டும். (அங்கையில் - விரல்
இடையினாலும்). எண்ணுவார் - செபிக்கிறவர்களை.
(தகுதியற்றவர்கள் ஆயினும்) தக்க - தகுதிவாய்ந்த. வானவராய் -
தேவர்களாய். தகுவிப்பது - தகுதிபெறச் செய்வது. நக்கன்
-ஆடையிலியாகிய சிவபெருமான். நாமம் நமச்சிவாயவே.