3328. போதன் போதன கண்ணனு மண்ணல்தன்
  பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி யலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.             9

     9. பொ-ரை: தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும்,
தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும்
தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட
முயற்சித்து காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர்
அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது ‘நமச்சிவாய’ என்ற
திருவைந்தெழுத்தேயாகும்.

     கு-ரை: போதன் - தாமரைப் பூவிலிருப்பவனாகிய பிரமனும்.
போது அன கண்ணனும்- (தாமரைப்) பூப்போன்ற கண்களையுடைய
திருமாலும். நேடிய - தேடிய. யாதும் - பற்றுக்கோடு எதுவும்.
காண்பு - காண்டல். அரிதாகி - இல்லையாகி. அரிது - இல்லை
என்னும் பொருளில் இங்கு வந்தது. ‘மனக்கவலை மாற்றலரிது’
என்புழிப்போல் ஆகும்.