3330. நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
  சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.           11

     11. பொ-ரை: நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின்
திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம்
மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த
இத்திருப்பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம்
அறுக்க வல்லவர் ஆவர்.

     கு-ரை: சந்தையால் - இசையோடு, பாடிய என ஒரு சொல்
வருவிக்க.