| 
         
          | 3331. | விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே |   
          |  | சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடம் கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்
 நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே.     1
 |  
       
             1. 
        பொ-ரை: விரும்பப்படுகின்ற சந்திரனையும், கங்கையையும் தாங்கி, சுரும்பு, தும்பி ரீங்காரம் செய்யும் மலர்களைச் சூடியுள்ள
 சடை முடியையுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது
 கரும்பும், செந்நெலும், பாக்கு மரங்களும் நிறைந்து வளம்
 கொழிக்கும் திருத்தண்டலை நீள்நெறியாகும். இத்திருத்தலத்தைத்
 தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.
       கு-ரை: 
        விரும்பும் - விரும்பப்படுவதாகிய. திங்களும் - சந்திரனும். (கங்கையும்). விம்ம - பொலிவு அடைய. வெறுக்கப்படும்
 தன்மைவாய்ந்தது, பின்கடவுள் அணிதலால் விரும்பப்படுவதாயிற்று.
 சுரும்பு, தும்பி, இவை வண்டின் சாதி விசேடம். மலரின் நறு
 மணத்துக்காகச் சூழ்கின்றன.
 |