3332. இகழுங் கால னிதயத்து மென்னுளும்
  திகழுஞ் சேவடி யான்றிருந் தும்மிடம்
புகழும் பூமக ளும்புணர் பூசுரர்
நிகழுந் தண்டலை நீணெறி காண்மினே.        2

     2. பொ-ரை: சிவபக்தரான மார்க்கண்டேயரை மதியாது
இகழ்ந்த காலனின் இதயத்துள்ளும், என்னுள்ளும் திகழும், சிவந்த
திருவடிகளையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும்இடம்,
புகழுடைய திரு மகளும், அந்தணர்களும் விளங்கும் திருத்தண்டலை
நீள்நெறியாகும். அத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப்
போற்றுங்கள்.

     கு-ரை: காலன் இதயத்துத் திகழுதல் அச்சத்தால்; என் உள்
(உள்ளம்) திகழுதல் அன்பினால்; இக்கருத்தை “அஞ்சியாகிலும்,
அன்புபட்டாகிலும் நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ” என்னும்
அப்பர் வாக்கால் அறிக. “காலனறிந்தான் அறிதற்கரியான்
கழலடியே” என அவர் பாராட்டுவதாலும் அறிக. புகழ் -
உபலட்சணத்தால் புண்ணியத்தையும் தழுவும். பூமகள் - இலக்குமி.
செல்வமிகுதியால் (பழிபாவங்கள் ஈட்டுதலின்றிப்) புகழ்
புண்ணியங்களையீட்டுந் தன்மையை உடைய பூசுரர்
என்பது மூன்றாம் அடியின் குறிப்பு. நிகழும் - வசிக்கின்ற.