3367. கூருமாலை நண்பகற் கூடிவல்ல
       தொண்டர்கள்
பேருமூருஞ் செல்வமும் பேசநின்ற
     பெற்றியான்
பாரும்விண்ணுங் கைதொழப் பாயுங்கங்கை
     செஞ்சடை
ஆரநீரொ டேந்தினா னானைக்காவு
     சேர்மினே.                            7

     7. பொ-ரை: காலை, மாலை, நண்பகல் முக்காலங்களிலும்
இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார்கள் ஒன்று கூடி,
இறைவனின் திருநாம மகிமைகளையும் திருத்தலங்களின்
சிறப்புக்களையும், அவன் அருட்செயல்களையும் போற்றிப் பேச
விளங்கும் தன்மையன் சிவபெருமான். பூவலகத்தோரும்,
விண்ணுலகத்தோரும் கைதொழுது வணங்கக் கங்கையைச்
செஞ்சடையில் தாங்கியுள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக.

     கு-ரை: மாலை, நண்பகல் கூறவே ஏனைக்காலையும்
அடங்கிற்று, முப்பொழுதிலும் என்க. “முன்னம் அவனுடைய நாமங்
கேட்டாள் மூர்த்தியவனிருக்கும் வண்ணங்கேட்டாள்,
பின்னையவனுடைய ஆரூர்கேட்டாள்” என்ற அப்பர் வாக்கோடு
இரண்டாமடி யொத்திருத்தல் காண்க. கங்கை நீரோடு செஞ்சடை
ஆர ஏந்தினான் என்க.