3372. |
வாழ்க அந்தணர் வானவ ரானினம் |
|
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே. 1 |
1.
பொ-ரை: உலக நன்மையின் பொருட்டு வேள்விகள்,
அர்ச்சனைகள், வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள்
வாழ்க. அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும்
வானவர்கள் வாழ்க. வேள்வி, வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச
கௌவியங்களையும், திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள்
வாழ்க. வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக. சிவாலய
பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின்
செங்கோலாட்சி ஓங்குக. வேள்விகளால் வரும் நலங்களை அடைய
வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க.
உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக. இவ்வுலக மக்களின்
துன்பம் நீங்குக.
கு-ரை:
(அ) அந்தணர், வானவர். ஆன் இனம் வாழ்க
என்றது வேள்வி முதலியவற்றாலும் ஆலயங்களில் சிவார்ச்சனை
முதலிய வழிபாடுகளும் நிலைத்து நிற்கவும், அங்ஙனம் நிலைத்து
நிற்றலால் உலகம் சுபிட்சமாக வாழவும் வேண்டி இங்ஙனம்
வாழ்த்துவது வேள்வியால் உலகம் சுபிட்சம் உறும் எனலை,
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் என்பதாலும்
அறிக. (முதல் திருமுறை)
(ஆ) தண்புனல்
வீழ்க என்றது. வேள்வியின் பயன்மழை
பெய்தலும், குறித்து. மழையை வாழ்த்தியவாறு.
(இ) வேந்தனும்
ஓங்குக என்றது - சிவாலய பூசை முதலாகிய
இவற்றை என்றும் அழியாது காத்துவருபவன் அரசன், ஆதலின்
அரசனை வாழ்த்தியவாறு. ஆ பயன் குன்றும் அறுதொழிலோர்
நூல் மறப்பர் காவலன் காவான் எனின் என்பதை நோக்குக.
(குறள். 560)
(ஈ) தீயது எல்லாம்
ஆழ்க என்றது. சைவசமய மல்லாத
மற்றைச் சமய நெறிகளெல்லாம் ஒழிக, என்றும் உயிர்கட்குத் தீமை
பயப்பன பிற அனைத்தும் ஒழிக என்றவாறு. எல்லாம் என்னும்
எழுவாய்க்குப் பயனிலை சூழ்க என்பது. இது சேக்கிழார் அருளிய
பொருளிற் கண்டது.
(உ) அரன்நாமமே
சூழ்க என்றது. ஆன்மவர்க்கங்கள்
அனைத்தும் சிவபெருமான் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தை
ஓதி வாழ்ந்து, ஓங்குவன ஆகுக என்றவாறு. ஐந்தெழுத்தின் புணை
பிடித்துக் கிடக்கின்றேனை, முனைவனே முதல் அந்தம்
இல்லாமல்லற் கரை காட்டி ஆட்கொண்டாய் என்ற திருவாசகக்
கருத்தும் காண்க.
(ஊ) வையகமும்
துயர்தீர்கவே என்றது. உலகத்தவர்க்கு
இம்மை மறுமை இரண்டிலும் நேரக்கூடிய துன்பங்கள் நீங்குக
என்றவாறு.
|