3373. அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
       எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே.          2

     2. பொ-ரை: பாச ஞானத்தாலும், பசு ஞானத்தாலும்
காண்பதற்கு அரியவர். பதிஞானத்தால் உணரும் மெய்யன்புடைய
அடியவர்க்கு அவர் திருமேனி தரித்து வந்து, நெருப்பேந்திய
கையர், ஏறுகந்தேறுவர், கண்டமும் கரியவர், காடுறை
வாழ்க்கையராய் எளிதிற்காட்சி அருளுவர். ஆயினும் உலகத்தையே
தம் வடிவமாகக் கொண்ட பெரியவர். அவருடைய தன்மையை
யாவரால் அறிந்து கொள்ள முடியும்?

     கு-ரை: அரிய காட்சியராய்... வாழ்க்கையர் என்றது.
அன்பில்லார்க்குக் காண்டற்கு அரியர் (ஆகி) (இருந்தும்)
மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் உருமேனி தரித்துவந்து,
தமது அங்கை சேர் எரியர், ஏறுகந்தேறுவர், கண்டமும் கரியர்,
காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காணக் காட்சி அருளுவர்
என்றவாறு. ஆயினும் பெரியர் என்றது. இவ்வடிவே அன்றி,
பிருதிவி முதலாகிய பூதங்களும், ஆன்மகோடிகளும்,
பல்கோடியண்டங்களும் பிற அனைத்தும் தம்வடிவாக நிற்பர்
என்றவாறு - சிவஞானசித்தியார். ஆர் அறிவார் அவர் பெற்றி
(பெற்றி - தன்மை) என்றது. பசுகரணம் கெட்டுப் பதிகரணத்தால்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் எவராலுங்
காண்டற்கரியவனென்றபடி.