3393. கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு
       காழிதனில்
நன்றான புகழான் மிகுஞானசம்
     பந்தனுரை
சென்றார் தம்மிடர்தீர் திருவான்மி
     யூரதன்மேல்
குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை
     போயறுமே.                     11

     11. பொ-ரை: பாக்குமரக் கன்றுகள் வயல்களைச் சூழ்ந்து
விளங்குகின்ற சீகாழியில் அவதரித்து, நல்ல புகழ் மிகுந்த
ஞானசம்பந்தன், இடர்தீர்க்கும் திருவான்மியூரின் மேல் போற்றி
அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குக் கொடிய
தீவினையானது நீங்கும்.

     கு-ரை: கன்று - இளஞ்செடி, திருவான்மியூர் அதன்மேல்
ஞானசம்பந்தன் உரை என இயைக்க.