3441. நெய்யணி சூலமொடு நிறை வெண்மழு
       வும்மரவும்
கையணி கொள்கையினான் கனன் மேவிய
     வாடலினான்
மெய்யணி வெண்பொடியான் விரி கோவண
     வாடையின்மேல்
மையணி மாமிடற்றா னுறை யும்மிடம்
     வக்கரையே.                   4

     4. பொ-ரை: நெய் தடவப்பட்ட சூலத்தையும், வெண்ணிற
மழுவையும் படைக்கலனாக ஏந்தி, பாம்பைக் கையில் ஆபரணமாகப்
பூண்டு, நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன் சிவபெருமான்.
அவன் தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியவன். விரித்து
ஓதப்பெறும் வேதங்களைக் கோவணமாக அணிந்தவன். மை நிறம்
பெற்ற கரிய கண்டத்தையுடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: நெய் அணி - நெய்பூசிய. நிறை வெண்மழு -
வெண்மை நிறைந்த மழு. கை அணி - கையிற் பற்றிய. கனல்
மேவிய ஆடலினான் - உலகெலாம் எரியும் மகா சங்கார காலத்தில்
அவ்வக்கினி நடுவில் நின்று ஆடுதலையுடையவன். விரி - விரித்துக்
கட்டிய, கோவண ஆடையின் - கோவணமாகிய ஆடையினோடும்.
மெய்மேல் - தன்னுடம்பின்மீது, அணிந்து வெண்
திருநீற்றையுடையவன். மூன்றாம் அடி கொண்டு கூட்டுப்
பொருள்கோள்.