| 3443.  | 
          கார்மலி கொன்றையொடுங் கதிர் மத்தமும் | 
         
         
          |   | 
               வாளரவும் 
            நீர்மலி யுஞ்சடைமே னிரம் பாமதி 
                 சூடிநல்ல 
            வார்மலி மென்முலையா ளொடும் வக்கரை 
                 மேவியவன் 
            பார்மலி வெண்டலையிற் பலி கொண்டுழல் 
                 பான்மையனே.                     6 | 
         
       
            6. 
        பொ-ரை: கார்காலத்தில் மிகுதியாக மலரும் கொன்றை  
        மலரும், ஊமத்த மலரும், ஒளி பொருந்திய பாம்பும், கங்கையும்  
        சடைமுடியில் திகழ, கலைநிரம்பா பிறைச்சந்திரனைச் சூடி, நல்ல  
        கச்சணிந்த மென்மையான முலைகளையுடைய உமாதேவியோடு  
        திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான்  
        சிவபெருமான். அப்பெருமான் இப்பூவுலகில் வெண்ணிறப்பிரம  
        கபாலத்தில் பிச்சையேற்றுத் திரியும் தன்மையன். 
            கு-ரை: 
        கார் - கார்காலத்தில். மலி - மிகுதியாக மலரும்,  
        கொன்றை, வாள் அரவு - ஒளிபொருந்திய பாம்பு. நிரம்பாத மதி  
        - கலை நிரம்பாத பிறை. பார் - பூமியின்கண். மலிவெண்தலை -  
        வெண்மை மிக்க தலை. பலி கொண்டுழல் - பிச்சையேற்றுத்  
        திரிகின்ற, பான்மையன்.  
	 |