3453. |
பாரிய லும்பலியான் படி யார்க்கு |
|
மறிவரியான்
சீரிய லும்மலையா ளொரு பாகமும்
சேரவைத்தான்
போரிய லும்புரமூன் றுடன் பொன்மலை
யேசிலையா
வீரிய நின்றுசெய்தான் விரும் பும்மிடம்
வெண்டுறையே. 5 |
5.
பொ-ரை: சிவபெருமான் உலகத்தார் செய்யும் பூசைகளைத்
தான் ஏற்பவன். தன் தன்மையை உலக மாந்தர்களின் சிற்றறிவால்
அறிவதற்கு அரியவனாய் விளங்குபவன். புகழ்மிக்க உமாதேவியைத்
தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். போர் செய்யும்
தன்மையுடைய முப்புரங்களுடன் பொன்மயமான மேருமலையே
வில்லாகக் கொண்டு தன் வலிமையைக் காட்டிப் போர் செய்தவன்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும்
திருத்தலமாகும்.
கு-ரை:
பார் இயலும் பலியான் - உலகம் முழுவதிலும்,
செய்யும் பூசையைக்கொள்பவன். பார் - பூமி - இங்கு உலகம்
என்னும் பொருளில் வந்தது. உலகுக்கொருவனாய் நின்றாய்
நீயே எனப்படுவதால். (தி.6 ப.38 பா.1) உலகத்தார் பலவடிவிலும்
போற்றும் பூசையெல்லாம் அவனுக்கேயாதலின் - இங்ஙனம்
கூறியருளினார். படி - நிலைமை, யார்க்கும் அறிவு அரியான்.
அப்படியும், அந்நிறமும் அவ்வண்ணமும், அவனருளே கண்ணாகக்
காணின் அல்லால் .... காட்டொணாதே (தி.6 ப.97 பா.10) என்ற
கருத்து. மலையாள் - இமய மலையில் வளர்ந்த உமாதேவியார்.
மலையான் மருகா என ஆண் பாலில் வந்துள்ளதுபோலப்
பெண்பாலில் மலையாள் என வந்தது. சீர் - தனக்கு ஒத்த பண்பு
அது. சிவஞான சித்தியாரில் எத்திறன் நின்றான் ஈசன் அத்திறம்
அவளும் நிற்பள் சத்திதான் சத்தனுக்குச் சத்தியாம், சத்தன்
வேண்டிற்றெல்லாம் ஆம் சத்திதானே (சித்தியார் 75, 76)
என்னுங் கருத்து. கங்கையைத் தலையில் வைத்ததன்றி யென்னும்
பொருள்தருதலால் பாரகமும் என்றது இறந்தது தழுவிய எச்ச
உம்மை. இயலும் - (வானில்) இயங்கிய, புரம் மூன்றுடன் -
திரிபுரங்களுடன், பொன் மலையே - மேருமலையே சிலையா (க).
வீரியம் நின்று - தன்வீரியங்காட்டி நின்று போர் செய்தான் என்க.
|