3454. ஊழிக ளாயுலகா யொரு வர்க்கு
       முணர்வரியான்
போழிள வெண்மதியும் புன லும்மணி
     புன்சடையான்
யாழின் மொழியுமையாள் வெரு வவ்வெழில்
     வெண்மருப்பின்
வேழ முரித்தபிரான் விரும் பும்மிடம்
     வெண்டுறையே.                 6

     6. பொ-ரை: சிவபெருமான் ஊழிக்காலங்கள்தோறும்
உலகப்பொருட்களுள் கலப்பால் ஒன்றாய் விளங்கினும்,
ஒருவர்க்கும் உணர்வதற்கு அரியவனாய் விளங்குகின்றான்.
பிளவுபட்ட வெண்ணிறச் சந்திரனையும், கங்கையையும் அணிந்த
சடையுடையவன். யாழ் போன்று இனிமையான மொழி பேசுகின்ற
உமாதேவி அஞ்சும்படி அழகிய வெண் தந்தமுடைய யானையின்
தோலை உரித்தவன். அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும்
இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: ஊழிகளாய் - ஊழிக்காலங்களாய். உலகமாகி
நின்றும் - ஒருவர்க்கும் உணர்வரியன். ஒரு நயம். “மரத்தில்
மறைந்தது மாமதயானை. பரத்தை மறைத்தது பார் முதற்பூதம்”
(தி.10 பா.2256) என்று உவமை முகத்தாற் கூறுவர் திருமூல நாயனார்.
போழ் - பிளவாகிய, வெண்மதி. மருப்பின் வேழம் - கொம்பை
யுடைய யானை. யாழின் மொழி - இன் - ஒப்புப் பொருளில்
வந்தது.