3458. நக்குரு வாயவருந் துவ ராடை
       நயந்துடையாம்
பொக்கர்க டம்முரைகள் ளவை பொய்யென
     வெம்மிறைவன்
திக்கு நிறைபுகழார் தரு தேவர்பி
     ரான்கனகம்
மிக்குயர் சோதியவன் விரும் பும்மிடம்
     வெண்டுறையே.                 10

     10. பொ-ரை: ஆடையணியா உடம்புடைய சமணர்களும்,
மஞ்சட் காவியாடை அணிந்த புத்தர்களும் மெய்ப்பொருளாம்
இறைவனைப் பற்றி ஏதும் கூறாது, தோன்றி நின்று அழியும்
தன்மையுடைய உலகப் பொருள்கள் பற்றிக் கூறும் உரைகளைப்
பொருளெனக் கொள்ளற்க. எம் தலைவனான சிவபெருமான்
எல்லாத் திக்குகளிலும் நிறைந்து புகழுடன் விளங்குபவன்.
தேவர்கட்கெல்லாம் தலைவன். பொன் போன்று மிக்குயர்ந்த
சோதியாய் விளங்குபவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும்
இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: நக்குரு - நக்க உரு. ஆடையணியா உடம்பு.
நயந்துடை - நயந்து உடை, பொக்கர் - பொய்யர். பொக்கு -
திசைச்சொல். பொய்யென - பொய் என்னும்படி திக்கு நிறைந்த
புகழ் உடைய பிரான் என்க. கனகம் - பொன்போலும். மிக்கு
உயர்சோதியவன் - மிகுந்த உயர்ந்த உடம்பின் ஒளியையுடையவன்
“பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறணிந்து” என்றும் (தி.4.ப.81.பா.9.) “பொன்னார் மேனியனே” என்றும் (தி.7.ப.24.பா.1.)
வருவன காண்க.