3475. ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச்
       சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயிறூவி
     மடநாராய்
சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங்
     குடிமேய
நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென்
     றுரையீரே.                       5

     5. பொ-ரை: ஆரல், சுறவம் ஆகியன பாய்கின்ற அகன்ற
கழனிகளில் சிறகுகளை உலர்த்துகின்ற நெடிய மூக்கையுடைய சிறிய
உள்ளான் பறவையே!. அடர்ந்த சிறகுடைய இளநாரையே! புகழ்மிக்க
சிறுத்தொண்டர் பணி செய்ய திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்
தருளுகின்ற கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய
சிவபெருமானிடம் சென்று என்னுடைய நிலையினை உரைப்பீர்களாக.

     கு-ரை: கழனியின் கண்ணே சிறகையுலர்த்துகின்ற பார்
அல்வாய் - நெடிய மூக்கையுடைய. சிறு குருகே - சிறிய உள்ளான்
பறவையே, பயில் - அடர்ந்த, தூவி - இறகையுடைய நாரையே.