| 
         
          | 3497. | பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் |   
          |  | பணிந்திறைஞ்ச நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்று
 மொருநொடியில்
 வின்மலையி 
            னாண்கொளுவி வெங்கணையா
 லெய்தழித்த
 நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக்
 காட்டாரே.                         6
 |  
           6. 
        பொ-ரை: தேவர்கள் பலவகையான மலர்களைத் தூவி இறைவனின் திருவடிக்கீழ்ப் பணிந்து வணங்க, நன்மைபுரியாது
 தீமை செய்த வலிய அசுரர்களின் மூன்று நகரங்களையும், ஒரு
 நொடியில், மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகி என்னும்
 பாம்பை நாணாகக் கொண்டு அக்கினியாகிய அம்பை எய்து
 அழித்த, இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சிவபெருமான் ஒலிமிக்க
 திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        பன்மலர்கள் கொண்டு - பலவகை மலர்களையும் கொண்டு. (தூவி) அடிக்கீழ்ப்பணிந்து இறைஞ்ச - திருவடியின்கீழ்ப்
 பணிந்துவணங்க. நன்மை இலா - தீமை செய்தலையுடைய. வில்
 மலையின் - வில்லாகிய மலையில். வெம்கணையால் - திருமாலாகிய
 கொடிய அம்பினால். நகர் மூன்றும் - முப்புரங்களையும். ஒரு
 நொடியில் - ஒரு மாத்திரைப்பொழுதில். நின்மலனார் -
 இயல்பாகவே பாசங்களின் நீங்கிய பெருமானார்.
 |