3503. வண்டிரைக்கும் மலர்க்கொன்றை
       விரிசடைமேல் வரியரவம்
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக்
     காபாலி கனைகழல்கள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத்
     துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளம்
தெண்டிரைக்கள் கொணர்ந்தெறியுந்
     திருவேட்டக் குடியாரே.              1

     1. பொ-ரை: வண்டுகள் ஆரவாரிக்கும் கொன்றை மாலையை
விரிந்த சடையின்மேல் அணிந்து, வரிகளையுடைய பாம்பைக் கண்டு
பயத்தால் ஆரவாரிக்கும் சந்திரனைச் சடையில் சூடியுள்ள
சிவபெருமானின் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளைத்
தொண்டர்கள் ஆரவாரித்துப் போற்றி வணங்க, விளங்குகின்ற
ஒளியையுடைய கடலிலுள்ள சுடர்போல் செந்நிறமான பவளத்தை
அலைகள் கொணர்ந்து எறியும் திருவேட்டக்குடி என்னும்
திருத்தலத்தில் அவர் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: (வண்டு) இரைக்கும் - ஆரவாரிக்கும். (மலர்க்
கொன்றை விரிசடைமேல்.) வரி அரவம் - கொடிய பாம்பை, கண்டு
இரைக்கும் - (பயத்தால்) ஆரவாரிக்கும்; பிறையையணிந்தசென்னி
- தலையையுடைய. காபாலி - சிவபெருமான். கனைகழல்கள் -
(தனது) ஒலிக்கின்ற வீரத்தண்டையை யணிந்த திருவடிகளை.
தொண்டு - தொண்டர்கள். இரைத்து - ஆரவாரித்து. இறைஞ்சித்
தொழுது - வணங்கிக் கும்பிட; திருவேட்டக்குடியிலுள்ளார்.
தெள்திரைகள் - தெள்ளிய அலைகள். துளங்கு - விளங்குகின்ற.
ஒளி - ஒளியையுடைய. நீர் - கடலிலுள்ள, சுடர்ப்பவளம் -
சுடரையுடைய பவளத்தை; அணியும் காபாலி யாண்டையாரெனின்
திருவேட்டக்குடியார் என்க.