3505. தோத்திரமா மணலிலிங்கந்
       தொடங்கியவா னிரையிற்பால்
பாத்திரமா வாட்டுதலும்
     பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தமென மறைநால்வர்க்
     கறம்புரிநூ லன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாருந்
     திருவேட்டக் குடியாரே.      3

     3. பொ-ரை: வழிபாடு செய்வதற்காக மணலில் இலிங்கத்தை
அமைத்து, தாம் மேய்க்கும் பசுக்கூட்டங்களின் பாலைப்
பாத்திரத்தில் பொருந்தக் கொண்டு, அபிடேகம் செய்து வழிபட்ட
சண்டேசுரர்க்கு மேலான சோதிவடிவை அருள்புரிந்தவன்
சிவபெருமான், தனக்கு அன்பர் என்று வேதங்களில் வல்ல சனகாதி
முனிவர் நால்வர்க்கும் அன்று அறம் உரைத்தவன் சிவபெருமான்.
அப்பெருமான் புனித தீர்த்தமாகிய கங்கையைச் சடையிலே தாங்கித்
திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: மணல் - மணலில். இலிங்கம் - சிவலிங்கவடிவை,
தொடங்கி - நிறுவி, ஆன் நிரையில் - கூட்டமாகிய பசுக்களில்
(கறந்த) பால், பாத்திரம் (ஆ) பாத்திரத்தில் பொருந்தக் கொண்டு,
ஆட்டுதலும் - (சண்டேசுர நாயனார்) அபிடேகித்தலும், பரிந்து -
விரும்பி. பரஞ்சோதி - மேலான சோதிவடிவை அருளி - அவர்க்கு
அருள் புரிந்து, ஆத்தம் என - (நமக்கு) அன்பர் என்று, மறை -
வேதங்களில் வல்ல, நால்வர்க்கு - சனகர் முதலிய முனிவர்களுக்கு,
அறம் - சிவதருமம். நூல் - நூற்பொருளை, உரைத்த - சொல்லாமற்
சொல்லிய, தீர்த்தம். கங்காதீர்த்தம். ஆட்டுதலும் - என்ற வினைக்கு
எழுவாய் வருவித்துரைக்கப்பட்டது. ஆத்தம் - நட்பு “ஆத்தம்
என்றெனையாள் உகந்தானை” என்பதும் (தி.7. ப.62. பா.4) அறிக.
சண்டேசுவர நாயனார்க்கு ஒளிவடிவாயதை “சிறுவனார் .... சூழ்ந்த
ஒளியில் தோன்றினார்” என்ற பெரிய புராணத்தும் அறிக.
(தி.12 சண்டீசர் 55).