3520. |
அரணையுறு முரணர்பலர் மரணம்வர |
|
விரணமதி
லரமலிபடைக்
கரம்விசிறு விரகனமர் கரணனுயர்
பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறு
மரவையரி சிரமரியவச்
சிரமரன சரணமவை பரவவிரு
கிரகமமர் சிரபுரமதே. 7 |
7.
பொ-ரை: மும்மதில்களை அரணாகக் கொண்ட
திரிபுரத்தசுரர்களால் பலருக்கு மரணம் ஏற்பட, காயங்கள் முதலான
உண்டாக்கித் துன்புறுத்தும் அம்மதிலின் மேல் அரத்தால்
அராவப்பட்டஆயுதத்தைக் கையினால் ஏவிய சமர்த்தனும், தன்னைச்
சரணடைந்தவர்களின் கரணங்களின் சேட்டையை அடக்குவிப்
போனும், யாவரினும் உயர்ந்த மேன்மையுடையவனும், உபதேசிக்கும்
முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, எல்லோராலும் போற்றப்படுகின்ற
அமுதத்தைப் பாற்கடலிலிருந்து கடைந்து எடுத்த காலத்தில்,
தனக்குக் கிடைக்கும்படி பந்தியில் வந்த பாம்பின் சிரத்தினைத்
திருமால் அரிந்து வீச, அந்தத் தலையானது சிவபெருமானைச்
சரணடைந்து துதித்தலால் இரு கிரகங்களாக நவக்கிரக வரிசையில்
பொலியும் சிரபுரம் என்னும் திருத்தலம் ஆகும்.
கு-ரை:
அரணையுறும் - மதிலைப்பொருந்திய, முரணர் -
திரிபுரத்தசுரர்களால். பலர் மரணம்வர - பலருக்கு மரணம் நேர.
இரணம் - காயங்கள் முதலியன உண்டாக்கித் துன்புறுத்தும், மதில்
- அம்மதிலின்மேல். அரமலி படை - அரத்தால் அராவப்பட்ட
ஆயுதத்தை, கரம் - கையினால். விசிறு - ஏவிய, விரகன் -
சமர்த்தனும், அமர் கரணன் தன்னை அடைந்தவருக்கு கரணங்களின்
சேட்டையை அடக்குவிப்போனும். (உயர்பரன் - யாவரினும் உயர்ந்த
மேன்மை உடையவனும்). நெறி கொள்கரன் அது - உபதேசிக்கும்
முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமாகிய
சிவபெருமானின், இடமாம் - தலமாகும். பரவு - துதிக்கத்தக்க.
அமுது - அமிர்தம், விரவ - தனக்குக்கிடைக்கும்படி. உறும்
அரவை - பந்தியில் வந்த பாம்பை. விடல் - விடத்தோடு. புரளம்
உறும் - புரளுதல் உறும், அரிசிரம் அரிய - திருமால் அதன்
தலையை வெட்ட. அச்சிரம் - அந்தத் தலையானது, அரன் -
சிவபெருமானது, சரணமவை - பாதங்களை, பரவ - துதித்ததினால்.
இருகிரகம் - இரண்டு கிரகங்களாக, அமர் - நவக்கிரக வரிசையில்
அமரச்செய்த, சிரபுரம் - சிரபுரமாம். உபதேசிக்கும் முறையைக்
கொண்ட கரன் என்றது மும்மலம்வேறு பட்டொழிய மொய்த்துயிர்,
அம்மலர்த்தாள் நிழல் அடங்கும் உண்மையைக், கைம்மலர்க்
காட்சியில் கதுவநல்கிய என்னும் கச்சியப்ப முனிவர் வாக்கால்
அறிக.
|