3524. நச்சரவு கச்செனவ சைச்சுமதி
       யுச்சியின்மி லைச்சொருகையான்
மெய்ச்சிர மனைச்சுலகி னிச்சமிடு
     பிச்சையமர் பிச்சனிடமாம்
மச்சமத நச்சிமத மச்சிறுமி
     யைச்செய்தவ வச்சவிரதக்
கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்க
      ணச்சிமிடை கொச்சைநகரே.        11

     11. பொ-ரை: நஞ்சையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி,
சந்திரனைத் தலையிலே சூடி, ஒரு கையில் பிரமகபாலத்தைத்
தாங்கி, உலகிலே நாடோறும் இடுகின்ற பிச்சையை விரும்பும்
பித்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், மீன் நாற்றத்தை
விரும்பும் மச்சகந்தியை வசமிழந்து ஆற்றினிடையில் புணர்ந்த
கொச்சைத் தன்மைக்குக் கதறி அது நீங்க பராசரமுனிவர் வணங்க,
தேவர்களும் விரும்பி அணுகும் கொச்சைவயம் எனப்படும்
திருத்தலமாகும்.

     கு-ரை: நச்சு அரவு - நஞ்சு அரவு, நஞ்சையுடைய பாம்பை.
கச்சென - கச்சாக. அசைச்சு - அசைத்து - கட்டி, மதி - சந்திரனை,
உச்சியில் - தலையில், மிலைச்சு - மிலைத்து, மிலைந்து, ஒரு
கையான் - ஒரு கையில். மெய் - (பிரமன்) உடம்பினின்றும்
(கிள்ளிய) சிரம் - தலையை, அணைச்சு - தாங்கி, உலகில் -
உலகிலே, நிச்சம் - நாடோறும், இடு - இடுகின்ற, பிச்சை -
பிச்சையை, அமர் - விரும்பும், பிச்சன் இடமாம் - பித்தனாகிய
பெருமானின் இடமாகும். மச்சம் - மீனின். மதம் - நாற்றத்தை,
நச்சி - விரும்பி. மதமச்சிறுமியை - வலையர் சிறுமியை, அச்சவரதம்
- (அச்சத்தைத் தரும், விரதம்) அச்சத்தைத் தரும் கொள்கையின்
பயனாக நேர்ந்த. கொச்சை - கொச்சைத் தன்மைக்கு. முரவு -
கதறிய. அச்சர் - பராசர முனிவர். பணிய - வணங்க (அதுகண்டு)
சுரர்கள் - தேவர்களும். மிடை - நெருங்குகின்ற.